Home News பனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி

பனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி

யாழ்.ஊர்காவற்றுறை பனை,தென்னை வள கூட்டுறவு சங்கத்தின் கிளையை மூடுமாறு பிரதேச செயலகம் பணித்திருக்கும் நிலையில், மேற்படி சங்க கிளையை புதிய இடத்தில் ஆரம்பிப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சங்க பிரதிநிதிகளுடன் ஆராய்ந்துள்ளார்.

இந்த கூட்டம் இன்று காலை ஊர்காவற்றுறை பனை,தென்னைவள கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்றது.

சுமார் 46 வருடங்களாக மேற்படி பனை,தென்னைவள கூட்டுறவு சங்கத்தின் கிளை தனியார் கட்டடம் ஒன்றில் இலாபகரமாக இயங்கிவருகின்றது.

இந்நிலையில் மேற்படி கட்டடத்தை விட்டு வெளியேறுமாறு கூறும் பிரதேச செயலகம் மாற்று இடம் ஒன்றை இதுவரை வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாற்று இடம் ஒன்று தொடர்பாக பிரதேச செயலருடன் பேசி தீர்வு பெற்று தருவதாக உ றுதியளித்துள்ளதுடன், எதிர்காலத்தில் கள் விற்பனையை வெற்றிகரமாகவும், நவீன வளர்ச்சிகளை அடிப்படையாகவும் கொண்டு மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.